என் மலர்
செய்திகள்

வனவிலங்கு சரணாலயம் திறப்பு
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறப்பு
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க சைக்கிள் வசதி செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இ்ங்கு பசுமை மாறா காடுகள் உள்ளன. இங்கு மான், குதிரை, நரி, முயல், காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரணாலயம் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது கடுமையாக சேதம் அடைந்தது. இந்த சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதை தொடர்ந்து தற்போது மரங்கள் வளர்ந்து பச்சைப்பசேல் என காணப்படுகிறது.
இந்த வனவிலங்குகள் சரணாலயம் அருகே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்கின்றன. வனவிலங்குகள் சரணாலயத்தை பார்ப்பதற்காக நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை திறந்து பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயம் நேற்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.
நாகை மாவட்ட வன அலுவலர் கலாநிதி கலந்து கொண்டு வனவிலங்கு சரணாலயத்தை திறந்து வைத்தார். இதில் வனத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுலா பயணிகள் சரணாலயத்தை சுற்றிப்பார்க்க வசதியாக 10 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
Next Story






