என் மலர்
செய்திகள்

ராஜபாளையத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. முத்துபிரியா என்ற 7 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில் குருசெல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து பலமுறை மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டில் விட்டுவிட்டு மாரிமுத்து கடைக்கு சென்றுவிட்டார்.
இந்த சமயத்தில் குருசெல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரிமுத்து வீடு திரும்பியபோது வீட்டில் மனைவி மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து, நேற்று இரவு அதே மின் விசிறியில் தனது மனைவி தூக்கு போட்ட சேலையாலேயே தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






