search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசிய போது எடுத்த படம்.
    X
    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசிய போது எடுத்த படம்.

    சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை வெளியிடு

    சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிப்ரவரி 6-ந் தேதி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான மறு ஆலோசனைக் கூட்டம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

    தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கூடத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

    வாரத்தில் 6 நாட்கள் பள்ளிக்கூடங்கள் நடைபெறும். ஞாயிறு, மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பள்ளிக்கூடங்கள் செயல்படும். மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’.

    பதில்: ‘இந்த பாடத்திட்டங்களை படித்தால் தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும்’ என்றார்.

    மற்ற வகுப்பு மாணவர்களுக்கு...

    கேள்வி: மேலும் மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா?.

    பதில்: ‘பொறுத்திருந்து பாருங்கள்’.

    முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகள் லதா, மகேஸ்வரி, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், மாவட்ட பால் வள தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நகரச் செயலாளர் காளியப்பன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×