search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகாடு பகுதியில் பெய்த பலத்த மழையால் பூந்தோட்டத்தில் தேங்கிய மழைநீரை படத்தில் காணலாம்.
    X
    வடகாடு பகுதியில் பெய்த பலத்த மழையால் பூந்தோட்டத்தில் தேங்கிய மழைநீரை படத்தில் காணலாம்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. பின்னர் காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின் பலத்த மழையாக பெய்தது. அதை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை 3 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. ஆனாலும் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதாகவும், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியின்றி வீடு மற்றும் கடை பகுதிகளில் மழைத்தண்ணீர் தேங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இப்பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் காரணமாக முறையாக பராமரிக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் மற்றும் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

    இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் திருவரங்குளம் பூவரசகுடி, கைக்குறிச்சி, கேட்பரை, மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, வேப்பங்குடி, காயாம்பட்டி, வம்பன் நால்ரோடு, கொத்த கோட்டை, தெட்சிணா புரம், வேங்கட குளம், கத்தக்குறிச்சி, வெண்ணாவல் குடி, குளவாய்பட்டி, கீழையூர், திருவுடையார்பட்டி, வல்லதீரா கோட்டை, மணியம்பலம், வாண்டா கோட்டை, பாலையூர், கிங்கினி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆலங்குடி பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டின் இறுதி நாளில் நல்ல மழை பெய்வதால் 2021-ம் ஆண்டு சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

    அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளான இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

    இந்த நிலையில் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. இந்த தொடர் மழையால் நேற்று அறுவடை பணிகள் நடைபெறவில்லை. மேலும் தொடர் மழையால் பயிரிட்டுள்ள நெற் கதிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் நெற்பயிர்க்குள் கால்வாய் அமைத்து மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். சிலர் தங்களது வயலில் அறுத்த நெற்பயிர்களை சாலை ஓரங்களில் அடுக்கி வைத்து தார்ப்பாயால் மூடி வைத்திருந்தனர்.
    Next Story
    ×