என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில் சேவை
    X
    ஊட்டி மலை ரெயில் சேவை

    9 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    9 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது. சாதாரண கட்டணத்துடன் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    கொரோனா காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து அண்மையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனியார் மூலம் அதிக கட்டணத்துடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அதன்பிறகு சில காரணங்களால் தனியார் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் மலை ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று சாதாரண கட்டணத்துடன் மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை தொடங்கியது.

    சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அதிகாலை முதலே வரத்தொடங்கினர். 9 மாதத்துக்கு பிறகு சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரெயில் முன்பு சிறப்பு பூஜைகளை செய்து பூசணிக்காய் உடைத்து பயணம் இனிதாக அமைய வழிபட்டனர். இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரெயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. மலை ரெயிலில் 228 பேர் பயணம் செய்தனர். இதில், சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசித்தனர். மலை ரெயிலில் பயணம் செய்தவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் புறப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டிக்கு மதியம் 12 மணிக்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது. 9 மாதங்களுக்கு பின்னர் மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×