search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    ஜி.எஸ்.டி. வரித்துறை பெண் அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

    வரி இணை ஆணையர் விமலாவின் அறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    தமிழக அரசு சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்யும் வேலூர் கோட்ட அலுவலகம் வேலூர் கோட்டை சுற்று சாலையில் செயல்பட்டு வருகிறது. இதன் இணை ஆணையராக விமலா (வயது42) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கூடுதலாக நுண்ணறிவு பிரிவு மற்றும் பொது நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஒருங்கிணைந்த வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

    இந்நிலையில் நேற்று வேலூர், திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 50 பேர் வரை பங்கேற்றனர்.

    பயிற்சி முடிவில் புத்தாண்டு பரிசு பொருட்கள் பெற இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை டி‌.எஸ்.பி.ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மாநில வரிதுறை இணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புத்தாண்டு பரிசாக ரொக்கப்பணம் மற்றும் சால்வை, இனிப்புகள், டைரிகள் பெறப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து இணை ஆணையர் விமலாவின் அறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து இணை ஆணையர் விமலாவிடம் விசாரணை நடத்தினர். ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்திற்க்கு உரிய கணக்கு காட்டாததால் அவை லஞ்ச ஒழிப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புத்தாண்டையொட்டி பணம் மற்றும் இனிப்பு வகைகள் சால்வை போன்றவற்றை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.

    சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவடைந்தது. மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இணை ஆணையர் விமலாவிடம் அதிகாரிகள் இது தொடர்பாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×