search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    பொங்கல் பரிசு, ரொக்கம் பெறுவதில் குறைபாடு ஏற்பட்டால் புகார் தெரிவிக்கலாம் - கலெக்டர் அண்ணாதுரை அறிவிப்பு

    ரே‌‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வினியோகம் செய்யப்படுகிறது என்றும், இதை பெறுவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் புகார் தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விழுப்புரம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ரே‌‌ஷன் கடைகளிலும் நடைமுறையில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறும். விடுபட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதியன்று வழங்கப்பட்டு இப்பணி முழுமையாக முடிக்கப்படும். ரே‌‌ஷன் கடைகள் மூலம் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வழங்கப்படும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைகளுக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். ரே‌‌ஷன் கடைகளில் தெரு, பகுதி வாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்படும் விவரங்கள் அந்தந்த கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இவற்றை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பின்பு தான் வழங்கப்படும்.

    இவற்றை வழங்குவதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் பறக்கும் படை தனி தாசில்தார் (செல்போன் எண்-9445045608) மற்றும் சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார்தெரிவிக்கலாம். மேலும் இதுகுறித்து புகார் தெரிவிக்க தனியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04146- 223265, 229884 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

    மேலும் நடைமுறையிலுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி ரே‌‌ஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500-ஐ பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பரிசுத்தொகுப்பு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிரு‌‌ஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் பாலகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×