search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வசந்தபுரம் பகுதியில் ஆட்டோ, லாரிகளில் பேட்டரிகள் திருட்டு அதிகரிப்பு - பொதுமக்கள் போலீசில் புகார்

    வேலூர் வசந்தபுரம் பகுதியில் ஆட்டோ, லாரிகளில் பேட்டரிகளும், மோட்டார்சைக்கிள்களும் அதிகளவில் திருட்டு போவதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் வசந்தபுரம் ராமசாமி முதலி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான லாரி ஒன்றை அந்த பகுதியில் நிறுத்தியிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு அந்த லாரியில் இருந்த 2 பேட்டரிகளை திருடிச் சென்றனர். காலையில் இதைப்பார்த்த கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்களும் மற்றும் லாரி உரிமையாளர்களும் கண்ணனுடன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் சென்று புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    வசந்தபுரம் பகுதியில் நிறுத்தப்படும் ஆட்டோ, லாரிகளில் உள்ள பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் செல்வது தொடர் கதையாக உள்ளது. வாகனங்களை வீடுகளின் முன்பு நிறுத்துவதற்கு கூட அச்சமாக உள்ளது. இரவில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் சுமார் 20 மோட்டார்சைக்கிள்களும் திருடப்பட்டுள்ளது.

    5 நாட்களுக்கு முன்பு மகேஷ் என்பரின் லாரியில் இருந்த பேட்டரிகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கஸ்பா, வசந்தபுரம் மேம்பாலப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×