search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    செந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி

    செந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் வாலிபர் தலை சிதறி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் வடக்குபட்டியை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் அதியமான்(வயது 35). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மருவத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    மருவத்தூருக்கும் பொன்பரப்பி கிராமத்திற்கும் இடையே சென்றபோது, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்த ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அதியமான் தலை மற்றும் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அப்பகுதி வழியாக சென்ற ராணுவ வீரர் ஒருவர், அந்த ஆட்டோவை மடக்கி பிடித்து, அதில் இருந்த டிரைவரிடம் போலீஸ் நிலையம் செல்லுமாறு அறிவுறித்தினார். ஆனால் ஆட்டோ டிரைவர், போலீஸ் நிலையம் செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் சிலர், குடும்ப பிரச்சினை காரணமாக திட்டமிட்டு அதியமானை கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட திரளான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதியமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடலூர் மாவட்டம் தொழுதூரை சேர்ந்த நாராயணசாமியின் மகன் பாபு(35) என்பவரது ஷேர் ஆட்டோ மோதி இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்துறை போலீசார் விடிய விடிய தேடி, ஆட்டோ டிரைவரை கைது செய்ததோடு, ஆட்டோவையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×