என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சம்பளம் வழங்கக்கோரி விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தர்ணா
சம்பளம் வழங்கக்கோரி விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் குளம் தூர்வாருதல், வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவ்வாறு நடைபெற்ற பணியில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. கொரோனா ஊரடங்கு மற்றும் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






