search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட மகளை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றவர்களை காணலாம்.
    X
    கடத்தப்பட்ட மகளை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றவர்களை காணலாம்.

    தந்தை உள்பட 3 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

    கடத்தப்பட்ட மகளை மீட்டு தரக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தந்தை உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). இவருடைய மனைவி கலைச்செல்வி (40). இவர்களுக்கு சினேகா(22) மற்றும் கீர்த்திகா(21) என்ற இரண்டு மகளும், அஜய் (20) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் சினேகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவருக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. லட்சுமணனின் இரண்டாவது மகளான கீர்த்திகா பி.இ. படித்துள்ளார். கீர்த்திகாவிற்கு வருகிற 26-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 21-ம் தேதி அதே ஊரை சேர்ந்த தினேஷ்குமார் உள்பட சிலர் இரவில் லட்சுமணன் வீட்டில் நுழைந்து மிளகாய் பொடியை தூவி கலைச்செல்வி மற்றும் அஜய் ஆகியோரை தாக்கிவிட்டு கீர்த்திகாவை கடத்தி சென்று விட்டனர்.

    இதில் காயமடைந்த கீர்த்திகாவின் தாய் கலைச்செல்வி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இந்தநிலையில் இதுவரை கீர்த்திகாவை போலீசார் மீட்டு தராததை கண்டித்து கீர்த்திகாவின் தந்தை லட்சுமணன், அக்கா சினேகா மற்றும் மாற்றுத்திறனாளியான மாமா இளையராஜா ஆகிய 3 பேர் நேற்று மதியம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமணன் வைத்து இருந்த தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் 3 பேரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினார்கள். தகவல் அறிந்து சிவகங்கை தாசில்தார் மைலாவதி அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் 26-ந் தேதி கீர்த்திகாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதால் அவரை மீட்டுத் தரவேண்டும் என்றும், இல்லை என்றால் தாங்கள் தீக்குளித்து இறந்து விடுவோம் என்றும் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த தாசில்தார் அவர்கள் 3 பேரையும் அங்கிருந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றார்.
    Next Story
    ×