என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு - கவனமாக செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மற்றும் கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானைகள், மான்கள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு காட்டுயானைகள் இடம் பெயர்ந்து செல்வதால் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகள் காட்டுயானைகளால் தாக்கப்பட்டு சேதம் அடைந்து வருகிறது. சமீபகாலமாக ரேஷன் கடைகளை காட்டுயானைகள் தாக்கி சேதப் படுத்தி வருகிறது.
ஆனால் முதுமலை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனமாக உள்ளது. இங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலையும், முதுமலையில் இருந்து தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. இதனால் பொதுமக்கள், டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் மேற்கண்ட சாலைகளில் பயணம் செய்து வருகின்றனர். அந்த சாலையோரத்தில் மாயாறு ஆறு ஓடுகிறது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளை கடந்து மாயார் ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்று திரும்புவது வழக்கம்.
இந்த சமயத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் சில வாகன ஓட்டிகள் ஈடுபடுவது உண்டு. இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பத்தில் கொரோனா தொற்று பரவலால் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் இயல்புநிலை மெதுவாக திரும்பி வருகிறது.
இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் சாலையோரங்களில் அதிகரித்துள்ளது. இதனால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துதல், வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தல் போன்றவற்றில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் குளங்கள், குட்டைகளில் நீர் நிறைந்து காணப்பட்டது.
மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இதனால் காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடர்ந்த வனத்துக்குள் முகாமிட்டு இருந்தன. தற்போது பருவமழை குறைந்து விட்டதால் குளங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மாயார் ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க அதிகளவு வருகிறது. அப்போது சாலைகளை வனவிலங்குகள் கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






