என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
Byமாலை மலர்1 Oct 2020 9:50 AM GMT (Updated: 1 Oct 2020 9:50 AM GMT)
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி இந்திராநகர் தொகுதி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் (வயது 53). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். காமராஜர் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்திற்கு சென்று அங்கு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இதேபோல் நேற்று காலை அங்கு சென்ற சுந்தர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது.
இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுந்தர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவலறிந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சுந்தரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சுந்தர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொலை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இதில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுந்தர் கொலை சம்பத்தை அரங்கேற்றியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நடைபயிற்சிக்கு சென்று இருந்தபோது சுந்தர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி தட்டாஞ்சாவடி நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது சுப்பையா திருமண மண்டபம் அருகே திண்டிவனம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களில் சிலர் திடீரென அந்த வழியாக வந்த அரசு சாலை போக்குவரத்து கழக பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அந்த பகுதியில் கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான சுந்தர் கொலையை தொடர்ந்து மறியல், கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு என அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X