search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்தது

    நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கோபி, பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் ஏராளமான பேரூராட்சிகள், ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

    நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.8 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.8 அடியாக நீடித்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 106 கன அடி தண்ணீர் வந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    Next Story
    ×