search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பூந்தமல்லி அருகே திருமண நாளில் இளம்பெண் தற்கொலை

    திருமண நாளை கொண்டாடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் திருமண நாளிலேயே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயல், கங்கா நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 30). இவர், தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சந்தியா(26). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது. நேற்று முன்தினம் இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் ஆகும்.இதனால் தனது தாய் வீட்டுக்கு சென்று திருமண நாளை கொண்டாடலாம் என மனைவியிடம் சுரேஷ் கூறினார். அதற்கு சந்தியா, திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

    தற்போது போதிய வருமானமும் இல்லாததால் தேவை இல்லாமல் வீண்செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    அதன்பிறகு சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் தனது மனைவியை சுரேஷ் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது தாயை வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கூறினார்.

    அதன்படி சுரேசின் தாயார் அங்கு சென்று பார்த்தபோது, சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சந்தியாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×