search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு - 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி

    15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு தாள்-1-க்கான முடிவு நேற்று வெளியானது. இதில் 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
    சென்னை: 

    நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2 முறையும், தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்ததாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டு, இறுதியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஜனவரி மாத ஜே.இ.இ. முதன்மை தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதன்மை தேர்வு கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில், 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    2 முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வை மொத்தமாக 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்த ஆண்டு எழுதிஇருந்தனர். இவர்களில் முதன்மை தேர்வு தாள்-1-க்கான(பி.இ., பி.டெக்.) முடிவு நேற்று வெளியாகி இருக்கிறது.

    இதில் 24 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேசிய தேர்வு முகமையின் தேர்ச்சியை பெற்று இருக்கின்றனர். அவற்றில் தெலுங்கானாவை சேர்ந்த 8 மாணவர்கள், டெல்லியை சேர்ந்த 5 மாணவர்கள், ராஜஸ்தானை சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் ஒருவர்கூட இதில் இடம்பெறவில்லை.

    அதேபோல், மாநிலவாரியாக அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றவர்களில் மாணவர்கள் வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த கவுரவ் கோச்சரும், மாணவிகள் வரிசையில் எஸ்.நிருபமாவும் இடம்பெற்று இருக்கின்றனர். ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-2-க்கான (பி.ஆர்க்., பி.பிளானிங்) தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.

    ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-1-ல் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், கட்-ஆப் மதிப்பெண்ணும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவ-மாணவிகள் அடுத்தகட்டமாக நடைபெறும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அந்த தேர்வு வருகிற 27-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அந்த தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.
    Next Story
    ×