search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மேலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு

    மேலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஒய்யம்மாள் (வயது 26). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், 2-வதாக கர்ப்பம் அடைந்த ஒய்யம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அங்குள்ள தும்பைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து ஒய்யம்மாளுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்படவே உடனடியாக அவரை மேலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் தும்பைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 108 ஆம்புலன்ஸ் சில மாதங்களுக்கு முன் வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலூரில் கொரோனா பணிக்கு மட்டுமே ஒரு ஆம்புலன்ஸ் உள்ளதால் உறவினர்கள் வேறு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மாற்று வாகனத்தில் ஒய்யம்மாளை அழைத்துக் கொண்டு மேலூருக்கு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஒய்யம்மாளின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி மேலூர் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் வந்து சமாதானம் செய்து ஒய்யம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×