என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஊத்தங்கரை அருகே தனியார் பால் நிறுவன ஊழியர் மர்ம மரணம் - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
ஊத்தங்கரை அருகே தனியார் பால் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ளது கெங்கபிராம்பட்டி. இங்கு தனியார் பால் நிறுவனத்தில் கீழ்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாது (வயது 23) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பால் நிறுவன வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் மாது நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் மாதுவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், தாசில்தார் தண்டபாணி, இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மாதுவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story