என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 72 பஸ்கள் இயக்கம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நேற்று 72 பஸ்கள் இயக்கப்பட்டன.
    கிருஷ்ணகிரி:

    கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் சேவை தொடங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது.

    இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 3 பஸ்கள், வேலூருக்கு 5 பஸ்கள், திருவண்ணாமலைக்கு 7 பஸ்கள், திருப்பத்தூருக்கு 6 பஸ்கள், ஓசூரில் இருந்து 40 பஸ்கள், தர்மபுரிக்கு 8 பஸ்கள், கோவைக்கு 2 பஸ்கள், திருச்சிக்கு ஒரு பஸ், ஒகேனக்கலுக்கு ஒரு பஸ் என மொத்தம் 72 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் பஸ்களில் பின்புறமாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும். பச்சை நிற பஸ்களில் 34 மற்றும் நீல நிற பஸ்களில் 33 பயணிகள் என 60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கண்டக்டர்கள் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சானிடைசர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    5 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளுக்கு ஓசூரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    பஸ்கள் புறப்படும் முன்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் சானிடைசர் பயன்படுத்தி பஸ்சில் ஏற அறிவுறுத்தப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அமர அறிவுறுத்தப்பட்டனர். 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டதால் ஓசூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×