என் மலர்
செய்திகள்

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன்பின்னர் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.
அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக, தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து வருகின்றனர். வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 34 ஆயிரத்து 366 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரத்து 845 அடியாக குறைந்தது. இதனிடையே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதன்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்கும், வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் கால்வாய் பாசனத்துக்கும் என மொத்தம் வினாடிக்கு 18 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 99.81 அடியாக உயர்ந்து இருந்தது.
Next Story