என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுபிக்‌ஷா-சின்னப்பாண்டி
    X
    சுபிக்‌ஷா-சின்னப்பாண்டி

    சிங்கம்புணரி அருகே கல்குவாரி நீரில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி

    சிங்கம்புணரி அருகே குளிக்கச்சென்ற இடத்தில் கல்குவாரி நீரில் மூழ்கி அண்ணன்- தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பட்டி முத்தரையர் காலனியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (வயது 35). இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி (11), மகள் சுபிக்‌ஷா (8). சின்னப்பாண்டி அங்கு உள்ள அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பும், சுபிக்‌ஷா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை இந்திராவின் அக்காள் மகள் பாண்டிமீனா (23) அருகில் உள்ள வண்ணான்மலையடி என்ற பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் சின்னப்பாண்டி, சுபிக்‌ஷா ஆகிய 2 பேரையும் துணைக்கு அழைத்து சென்றார். சுமார் 30 அடி ஆழ கல்குவாரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் பாண்டிமீனா குளித்துக்கொண்டு இருந்தார். குழந்தைகள் 2 பேரும் அருகில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் திடீரென அவர்களை காணவில்லை. இதையடுத்து பாண்டிமீனா வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கும் அவர்கள் இல்லை. இதையடுத்து அவர் உறவினர்களுடன் மீண்டும் கல்குவாரிக்கு சென்று தேடியபோது குழந்தைகள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தனர்.

    இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களது உடலை கண்டு தாய் இந்திரா, உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×