என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கூடலூரில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகை
கூடலூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
கூடலூர்:
தமிழகம், கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் உள்ளது. நீலகிரி சுற்றுலாத்தலமாக உள்ளதால் ஊரடங்கு காலத்துக்கு முன்பு வரை தினமும் ஏராளமானவர்கள் வருகை தந்தனர். இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களை இயக்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் வாகன ஓட்டம் இன்றி அவதிப்படுகின்றனர். சொந்த உபயோகத்துக்கு வைத்துள்ள வாகனங்களை விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்குவதால் வருவாய் இன்றி அவதிப்படுவதாக சுற்றுலா வாகன டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட காரை வாகன டிரைவர்கள் பிடித்து கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கூடலூரில் இருந்து ஊட்டி எம்.பாலாடா பகுதிக்கு 5 பேருடன் சென்ற மற்றொரு காரை சுற்றுலா வாகன டிரைவர்கள் பிடித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய ஆய்வாளர் விதிமுறைகளை மீறி இயக்கிய காருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து வசூலித்தார். பின்னர் காரை விடுவித்தார். இந்த நிலையில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை காலை 12 மணிக்கு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டிரைவர்கள் கூறியதாவது:-
கேரள பதிவு எண்ணில் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்கள் சுற்றுலா தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு முடிவடைந்தும் வாகனங்கள் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்களை விதிமுறைகளை மீறி வாடகைக்கு பயன்படுத்தப்படுகிறது. அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால் கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூருக்கு அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுகிறது. அரசுக்கு முறையாக வரிகள் செலுத்தி சுற்றுலா வாகனங்களை இயக்கும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் அரசுக்கு வரி எதுவும் செலுத்தாத வாகனங்கள் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்படுகிறது. 2 கார்களை பிடித்து ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு காரை அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சமயத்தில் அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் பிரபாகரன் சம்பந்தப்பட்ட டிரைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையொட்டி டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story






