search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்றால் மரணம்  கோப்புப்படம்
    X
    கொரோனா தொற்றால் மரணம் கோப்புப்படம்

    பரிசோதனை முடிவில் குளறுபடி : உறவினர் கொரோனாவுக்கு பலியானது தெரியாமல் அஞ்சலி செலுத்தியவர்கள் அதிர்ச்சி

    உடல்நலக்குறைவால் நகை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவர் கொரோனா தொற்றுக்கு இறந்ததாக சுகாதாரத்துறையினர் கூறியதால் இறுதி அஞ்சலி செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது.

    பின்னர் அவருக்கு உடல்நிலை சரி ஆகாததால் சென்னைக்கு அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ராமமூர்த்திக்கு ‘நெகட்டிவ்’ என சான்று அளித்தனர்.

    இதனையடுத்து அவரை நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆற்காடு அருகே செல்லும்போது அவருக்கு உடல்நிலை மோசமாகியது. இதனையடுத்து மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ராமமூர்த்தியின் உடலை நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதையறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உள்ள 99 நபர்களின் பட்டியல் வெளியிட்டது அதில் இறந்த ராமமூர்த்தியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவித்தனர்.

    அப்போது ராமமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்கு வேலூர்அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கு அதிகாரிகள் பட்டியலில் பெயர் உள்ளதால் கொரோனா தொற்று இருப்பது உறுதி என்றனர்.

    இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து ராமமூர்த்தியின் உடல் அரசின் விதிமுறைகளின்படி குடியாத்தம் ஒன்றிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 12 நபர்கள் மூலம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை இடுகாட்டில் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குடியாத்தத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் கொரோனா இல்லை என்றும், சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் கொரோனா உண்டு என்றும் உள்ளது. மேலும் இறுதி அஞ்சலியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மருத்துவ துறையினர் சான்றுகளை சரியாக அளிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×