search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன எந்திரம் மூலம் விசைப்படகில் ஐஸ் கட்டி நிரப்பும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
    X
    நவீன எந்திரம் மூலம் விசைப்படகில் ஐஸ் கட்டி நிரப்பும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

    2½ மாதத்துக்கு பிறகு ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க தயாராகும் மீனவர்கள்

    ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் 2½ மாதத்துக்கு பிறகு மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக விசைப்படகுகளில் ஐஸ் கட்டி, டீசல் நிரப்பினர்
    கடலூர் முதுநகர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரும் மீன்களை வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி, ஐஸ் பெட்டிகளில் வைத்து லாரிகள் மூலம் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதுதவிர ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலமும் அமலில் இருந்தது. வழக்கமாக ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். ஆனால் மீனவர்களின் நலன்கருதி தமிழக அரசு மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்துள்ளது. அதாவது ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணி முடிவடையாததாலும், மீன்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி கொடுக்காததாலும், ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்ததாலும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த நிலையில் தற்போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைத்துள்ளனர். இதனால் மீனவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் தங்களது படகுகளில் டீசல் நிரப்பி, வலைகளை ஏற்றும் பணியிலும், நவீன எந்திரம் மூலம் ஐஸ் கட்டிகளை நிரப்பும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறுகையில், தற்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி தலைமையில் அதிகாரிகள் துறைமுக பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீனவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி மீனவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், மீன்பிடித்து வந்த பிறகு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பிடித்து வரும் மீன்களை எந்த நேரத்தில் விற்பனை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
    Next Story
    ×