search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிமனையில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சி
    X
    பணிமனையில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சி

    மாவட்டத்தில் இன்று முதல் 192 அரசு பஸ்கள் இயக்கம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 192 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகளையும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பஸ் போக்குவரத்து குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற பணிமனைகளிலும் அரசு பஸ்கள் தயாராக உள்ளன.

    பஸ்கள் இயக்கப்படுவது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 டவுன் பஸ்களும், 122 மொபசல் பஸ்களும் என மொத்தம் 192 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு அறிவித்த 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். இதில் 60 சதவீத பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்குள்ளும், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும். மாவட்டத்தில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முக கவசம் அணிய வேண்டும். பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் ஏறி, முன் பக்க படிக்கட்டு வழியாக இறங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

    இதற்கிடையே தனியார் பஸ்களின் உரிமையாளர்களும் தங்களது பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பஸ் போக்குவரத்து இன்று தொடங்குகிற நிலையில் மதுரை, சிவகங்கை மார்க்கத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் இயங்கி வருகிறது. இதனை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று இரவில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து இன்று முதல் 30 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் 8 டவுன் பஸ்களும், 22 மொபசல் பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அறந்தாங்கி பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் இயக்கப்பட உள்ளது. ஒரு பஸ்சில் 35 பயணிகள் அமர்ந்து செல்லவும், 5 பயணிகள் நின்று செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி, மதுரை மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் பாதுகாப்பு அலுவலர் மூர்த்தி தெரிவித்தார்.

    Next Story
    ×