search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெய்வேலி என்.எல்.சி.யில் தீவிபத்து: படுகாயம் அடைந்த 8 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை

    நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்த 8 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மொத்தம் 4 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யபட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் உள்ள பாய்லர் பிரிவில் என்.எல்.சி. ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாய்லரில் திடீரென்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இந்த சம்பவத்தால் 6-வது யூனிட்டில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் என்.எல்.சி. தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் பணியில் இருந்த சர்பூதீன், பாவாடை, சண்முகம், அன்புராஜ், மணிகண்டன், பாலமுருகன், ரஞ்சித் குமார், ஜெய்சங்கர் ஆகிய 8 ஊழியர்கள் மீது ஆயில் பட்டதால் அவர்களின் உடலில் தீப்பற்றியது. உடனடியாக தீயினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மற்ற ஊழியர்கள் உதவியுடன் என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அறிந்ததும் ஊழியர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் குவிந்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து ஆஸ்பத்திரியில் குவிந்திருந்த பொதுமக்களை வெளியேற்றினர். என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 8 தொழிலாளர்களும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதியும் இந்த பகுதியில் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×