search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை வீரர்கள் அடக்க முயன்றதை படத்தில் காணலாம்.
    X
    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை வீரர்கள் அடக்க முயன்றதை படத்தில் காணலாம்.

    வடுகப்பட்டியில் ஜல்லிக்கட்டு - 20 பேர் காயம்

    வடுகப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 20 பேர் காயமடைந்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், உப்பிலியக்குடி அருகே உள்ள வடுகப்பட்டியில் மகா சுருளி சுவாமிகளின் 83-ம் ஆண்டு குருபூஜை விழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. முன்னதாக வடுகப்பட்டியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளையின் உரிமையாளர்கள் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், குக்கர், மிக்சி, மின்விசிறி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, அன்னவாசல், இலுப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வடுகப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×