search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா
    X
    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா

    கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாவட்ட கலெக்டர் ரத்னா அறிவுரை வழங்கியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கீழ்கண்டவாறு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

    கொரோனா வைரஸ் என்பது சீனா நாட்டில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்த வைரஸ் நோய்க்கு புளு காய்ச்சல் போன்று காய்ச்சல், இருமல் மூச்சு விடுதலில் சிரமம், போன்ற அறிகுறிகள் காணப்படும். நீங்கள் சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 15-ந் தேதிக்கு பின் நாடு திரும்பியவராக இருந்தால் நீங்களாகவே முன் வந்து உடல் நல பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    பரிசோதனை மையங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பு எண் 91-11-23978046 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும்.

    நீங்கள் சீனாவில் இருந்து நாடு திரும்பியவராக இருந்தாலோ அல்லது கொரோனா வைரஸ் தாக்கிய நபருடன் தொடர்பில் இருந்தாலோ நீங்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடவும், மற்ற நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்திடவும் வேண்டும்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் எவரும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல். அடுத்த 14 நாட்களுக்கு தனி அறையில் ஓய்வு எடுக்க வேண்டும். தும்மல் மற்றும் இருமலின் போது வாய் மற்றும் மூக்கினை நன்றாக கைக்குட்டை அல்லது உள்ளங்கையால் மூடிக்கொள்ளவும். இருமல் மற்றும் தும்மல் வந்த பின்பும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் உள்ள நபர்களிடமிருந்து தனித்து இருக்கவும்.

    நீங்கள் சீனாவில் இருந்து நாடு திரும்பியவராக இருந்தால் உங்களுக்கு காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தினை உடன் தொடர்புகொள்வதுடன், தங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளியிடங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தால் அதன் விபரத்தினை தங்கள் கிராமத்தில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் தெரிவித்து விட்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    பொதுமக்கள் இருமல் மற்றும் தும்மல் வந்த பின்பும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதற்கு முன்பும் தொட்ட பின்பும், சமையல் செய்வதற்கு முன்பும் சமையல் செய்த பின்பும், உணவு உண்பதற்கு முன்பும் உணவு உண்ட பின்பும், கழிவறைகளை உபயோகப்படுத்திய பின்பும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×