search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கோப்பையுடன் மாணவிகள்
    X
    மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கோப்பையுடன் மாணவிகள்

    மாநில அளவிலான கபடி போட்டியில் 2-ம் இடம்பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

    மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோப்பையுடன் சொந்த ஊருக்கு வந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3-ந் தேதி கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு தனியார் பள்ளி மாணவிகள் அணியும், சோழன்குடிக்காடு அரசு பள்ளி மாணவிகள் அணியும் மோதின. போட்டியின் முடிவில் 44 புள்ளிகள் பெற்று தனியார் பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும் 38 புள்ளிகள் பெற்று சோழன்குடிக்காடு அரசு பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரே அரசு பள்ளி மாணவிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோப்பையுடன் சொந்த ஊருக்கு வந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு கிராம மக்கள் திரண்டு சென்று ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மைதானத்தில் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி தலைமை தாங்கினார். மணப்பத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியை பேபிகீதா மாணவிகளை பாராட்டி பேசினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவஞானம் அறக்கட்டளை தலைவர் சோழன் குமார் வாண்டையார் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக பள்ளி ஆசிரியர் மணிமுத்து வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.
    Next Story
    ×