search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் 26 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி

    கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடந்தது. பேரணிக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். உக்கடத்தில் தொடங்கிய பேரணி சுங்கம் புறவழிச்சாலை, அரசு கல்லூரி ரோடு வழியாக செஞ்சிலுவை சங்கத்தை வந்து சேர்ந்தது. இந்த பேரணியில் கோவை, பொள்ளாச்சி,திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரம் பெண்கள் உள்பட 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடி, நெல்லை, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் மத்திய அதிவிரைவு படையினர் 200 பேர் துப்பாக்கி ஏந்திய படி முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், தி.மு.க. எம்.எல்.ஏ., நா. கார்த்திக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில துணைத்தலைவர் சேக் முகமது அன்சாரி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் நிஜாம் மைதீன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், தமிழ் புலிகள் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் தமிழர் கட்சியின் மாநில தலைவர் வெண்மணி, நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் அப்துல் வஹாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணி காரணமாக திருச்சி ரோடு, அவினாசி ரோடு, காந்திபுரம், உக்கடம்- பொள்ளாச்சி ரோடு உள்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் பேரணிக்கு தலைமை தாங்கிய கூட்டமைப்பின் தலைவர் ராஜா உசேன் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×