search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்
    X
    தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு- 200 பேர் தேர்வு எழுத தடை

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களையும் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.
    சென்னை:

    அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதில் 2 ஆயிரம் பேர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இந்த தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

    தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 200 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.

    இதையடுத்து விசாரணை நடத்தியதில் 200 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு நடத்தப்பட்டது.

    இதற்கிடையில் போலீஸ் விசாரணையில் 200 பேர் பல லட்சம் கொடுத்து மதிப்பெண் அதிகமாக வாங்கி இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மே மாதம் 2 மற்றும் 3-ந்தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 22-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    மீண்டும் தேர்வு எழுதக்கூடிய விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால் அதனை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கவில்லை.

    புதிதாக தேர்வு நடத்தும்போது அதற்கான கட்டணத்தை தவிர்க்க இயலாது. அதனால் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களையும் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறைகேடு செய்தவர்களை மறுதேர்வுக்கு அனுமதிக்க கூடாது, தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.

    இதற்கான அனுமதி கிடைத்து விடும் என்றும் முறைகேடு செய்த தேர்வர்கள் தேர்வு எழுத தடை உத்தரவு விரைவில் வரும் என்றும் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×