search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில்
    X
    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில்

    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லைக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் உள்புறத்தில் 4 உண்டியல்களும், வெளியில் ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை பணத்தை இந்த உண்டியல்களில் செலுத்துவது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு பூஜை முடிந்ததும் கோவிலின் நடை சாத்தப்பட்டது. கோவில் காவலராக தில்லைக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலு உள்ளார். இவர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் கதவு பூட்டை திறந்து, உள்ளே சென்றார். அப்போது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றி உடனடியாக அவர், கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமாருக்கும், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடைக்கப்பட்ட உண்டியலை பார்வையிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சுற்றுச்சுவர் மீது ஏறி கோவிலுக்குள் குதித்து, கடப்பாரையால் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. ஆனால் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது பற்றி தெரியவில்லை. சமீபத்தில்தான் 5 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அப்போது அதில், ரூ.7¾ லட்சத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். நகரின் மத்தியில் உள்ள தில்லைக்காளியம்மன் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    Next Story
    ×