search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காட்சியை பள்ளி மாணவிகள் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
    X
    கண்காட்சியை பள்ளி மாணவிகள் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் - கலெக்டர் பேச்சு

    குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி இடைநிற்றலால் ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் போன்றவை குறித்த கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்வது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, மன ரீதியான துன்புறுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. தேநீர் கடை, உணவு விடுதி, கட்டிட தொழிலில் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவதும் நடந்து வருகிறது. அதனை முற்றிலும் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

    குழந்தைகள் பாதுகாப்பிற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. நீலகிரியில் 60 சதவீத குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள். மீதம் உள்ள 40 சதவீதத்தினர் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தைரியமாக முன்வந்து குழந்தை பாதுகாப்பு மையத்தின் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாட்டின் சுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்து செயல்படுவேன். நான் ஒரு போதும் வன்முறையில் ஈடுபட மாட்டேன். மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டும் தீர்வு காண தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) இமிலிசா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×