search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அரியலூர் அருகே பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை

    அரியலூர் அருகே மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனமுடைந்த பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்  அடுத்த ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 37). இவரது மனைவி கிருத்திகா (27).  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபுவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தபால் துறையில் பணியாற்றி வருகிறார். அவருடன்  பிரபுவும் பணியாற்றி வந்த நிலையில், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக பிரபு மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டிருந்தார். லால்குடியில்   வழிப்பறியில் ஈடுபட்டதற்காக அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர், சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் தனது சொந்த ஊரான ஓலையூருக்கு சென்ற போது அங்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. 

    இதையடுத்து மனைவியின் சொந்த ஊரான மீன்சுருட்டிற்கு சென்றார்.அங்கு மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற அவர் அங்கிருந்த கிருத்திகாவை, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கிருத்திகா மறுத்து விட்டார்.  இதனால் மன வேதனையடைந்த பிரபு, ஓலையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். 

    இன்று காலை  நீண்ட நேரமாகியும்  பிரபு எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பிரபுவை எழுப்பிய போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  

    மேலும் பிரபுவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×