search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகள் முன்பு குளம்போல் தேங்கியுள்ள தண்ணீர்.
    X
    வீடுகள் முன்பு குளம்போல் தேங்கியுள்ள தண்ணீர்.

    பெண்ணாடம் அருகே இடி மின்னலுடன் பலத்த மழை- 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரகாலமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெண்ணாடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    பெண்ணாடம் அருகே உள்ளது வெண்கரும்பூர். இங்குள்ள புதுக்காலனியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கியது.

    வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளான இறையூர், முருகன்குடி, கீரனூர், பூவனூர், வெண்கரும்பூர் போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழைபெய்தது.

    சுமார் 1 மணிநேரம் மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வெண்கரும்பூர் கிராமத்தில் பலத்தமழை பெய்ததால் அங்குள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். பின்பு அவர்கள் விருத்தாசலம் - திட்டக்குடிசாலையில் திடீரென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து உடனடியாக வடிகால் வசதி அமைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர்.

    அதன் பின்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வீடுகளை சுற்றி தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
    Next Story
    ×