search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டெய்னர் லாரிகள்
    X
    கண்டெய்னர் லாரிகள்

    கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் 4-வது நாளாக நீடிப்பு

    கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி-இறக்குமதி முடங்கி உள்ளது.
    திருவொற்றியூர்:

    டிரெய்லர் லாரியில் ஒரு கண்டெய்னர் மட்டுமே ஏற்றுவோம், லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கூறி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 12 கண்டெய்னர், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் 2 தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர்கள் முடங்கி உள்ளன.

    இந்த நிலையில் தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தினரிடம் சி.எப்.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சமரசம் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து 4வது நாளாக வேலைநிறுத்தம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனால் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி - இறக்குமதி முடங்கி உள்ளது. பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து சரக்குகளை துறைமுகங்களுக்கு கொண்டு வந்த டிரைவர்கள் கண்டெய்னர் லாரிகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் எண்ணூர் விரைவு சாலை வெறிச்சோடி கிடக்கிறது.

    இதுகுறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிரெய்லர் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாசில்தார் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சி.எப்.எஸ். அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    எனவே துறைமுக தலைவர் நேரடியாக தலையிட்டு 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 20 அடி கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கும் 40 அடி கண்டெய்னர் ஏற்றி செல்லும் லாரிகளுக்கும் ஒரே வாடகை நிர்ணயம் செய்தால் உடனடியாக நாங்கள் வண்டிகளை இயக்குவோம். அதுவரை வண்டிகள் ஓடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×