search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை ரெயில் நிலையத்தில் செயல்படாமல் கிடக்கும் கண்காணிப்பு கேமிரா
    X
    நாகை ரெயில் நிலையத்தில் செயல்படாமல் கிடக்கும் கண்காணிப்பு கேமிரா

    செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வருமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    நாகை பகுதிகளில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்டவைகள் அமைந்த ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது. நாகைக்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நாகை ரெயில் நிலையம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும்.

    நாகை பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்கவும், அவை நடக்காமல் தடுக்கவும், போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான ரெயில் நிலையம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் நாகை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. குறிப்பாக நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே பழுதடைந்த கண்காணிப்பு கேமரா சீரமைக்கப்படாமல் வீட்டின் சுவரில் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் நாகை அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் போலீஸ்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சில புயலில் சேதமடைந்து உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை வெளிப்பாளையம், பரவை பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் 2 பெண்களிடம் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    மேலும் நாகை புதிய கடற்கரையிலும், கடற்கரை சாலையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அந்தபகுதியில் அடிக்கடி திருட்டுகள் நடக்கிறது. எனவே திருட்டுகளை தடுக்கும் வகையில் நாகை பகுதிகளில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் நாகை புதிய கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×