search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையை போன்று கோவையில் குண்டு வெடிக்கும் - சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல்
    X

    இலங்கையை போன்று கோவையில் குண்டு வெடிக்கும் - சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல்

    இலங்கையை போன்று கோவையில் குண்டு வெடிக்கும் என்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். #srilankablasts

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம போன் ஒன்று வந்தது.

    போனில் பேசிய நபர் இலங்கையை போன்று கோவையிலும் குண்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

    இதுபற்றி சென்னை போலீசார், உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவை போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். போனில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்.


    போனில் பேசியநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால் அவர் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்கபட வில்லை. அவரை பிடிக்க போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.

    வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணி முதல் ரெயில் நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

    அதிகாலை 4 மணி வரை 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை.

    சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியவர் குடிபோதையில் உளறினாரா என விசாரித்து வருகிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் பதிவான எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். #srilankablasts

    Next Story
    ×