search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர் கொலை வழக்கு: ‘டார்ச்லைட் அடித்ததை தட்டி கேட்டதால் வெட்டி கொன்றோம் - கைதான 6 பேர் வாக்குமூலம்
    X

    மீனவர் கொலை வழக்கு: ‘டார்ச்லைட் அடித்ததை தட்டி கேட்டதால் வெட்டி கொன்றோம் - கைதான 6 பேர் வாக்குமூலம்

    மணக்குடி மீனவர் கொலை வழக்கில் டார்ச்லைட் அடித்ததை தட்டி கேட்டதால் வெட்டி கொன்றோம் என கைதான 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே மணக்குடி லூர்து மாதா தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35). மீன்பிடி தொழிலாளி.

    வின்சென்டின் மனைவி தஸ்நேவிஸ் மேரிசஜினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வின்சென்ட், அவரது மனைவி தஸ்நேவிஸ் மேரிசஜினி மற்றும் குழந்தைகள் அனைவரும் அங்குள்ள குருசடி முன்பு இரவில் தூங்குவது வழக்கம்.

    கடந்த 23-ந்தேதி இரவு இதுபோல வின்சென்டும், அவரது குடும்பத்தினரும் குருசடி முன்பு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் வின்சென்டை அரிவாள் மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கினர். இதில் வின்சென்ட் பரிதாபமாக இறந்தார்.

    வின்சென்ட் கொலை செய்யப்பட்டது பற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் அதே பகுதியை சேர்ந்த கிதியோன், பாண்டியன், லாடஸ், லாடசின் மகன்கள் நிகில், அகில், லாடசின் சகோதரர் அந்தோணி, ஜஸ்டின், அஸ்வின் ஆகிய 8 பேர் வின்சென்டை வெட்டி கொன்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் லாடஸ், லாடசின் மகன்கள் நிகில், அகில், லாடசின் சகோதரர் அந்தோணி, ஜஸ்டின், அஸ்வின் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வின்சென்டை கொலை செய்தது ஏன்? என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    வின்சென்டிற்கும், எங்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. நாங்கள் குருசடியில் படுத்திருப்பவர்கள் யார்? என பார்ப்பது உண்டு. சம்பவத்தன்றும் இதுபோல குருசடியில் படுத்திருந்தவர்களை டார்ச் லைட் அடித்து பார்த்தோம்.

    அப்போது வின்சென்ட் எங்களிடம் தகராறு செய்தார். மனைவியின் முகத்தில் டார்ச்லைட் அடித்தது ஏன்? என்று கேட்டார். இதில் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. ஆத்திரமடைந்த நாங்கள் வின்சென்டை அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கினோம். இதில் படுகாயம் அடைந்த வின்சென்ட் இறந்துவிட்டார்.

    அதன்பிறகு நாங்கள் ஊரில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்தோம். போலீசார் எங்களை தேடி கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து கிதியோன், பாண்டியன் கும்பல் கொலைக்கு பயன்படுத்திய 4 அரிவாள் மற்றும் கம்பு, கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    வின்சென்ட் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கிதியோன், பாண்டியன் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
    Next Story
    ×