search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் - கல்வித்துறை உத்தரவு
    X

    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் - கல்வித்துறை உத்தரவு

    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. #PublicExamination
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கான தேர்வுகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடைகிறது. அதன்பின்னர், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு நடைபெற இருக்கின்றன.

    ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பள்ளி செயல்முறை திட்டத்தின்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி வரை பள்ளிகள் இயங்குவதாக இருந்தது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகளை 1.4.2019 முதல் 12.4.2019-க்குள் நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக உடனே அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

    வேலை நாட்களின் இழப்பினை சனிக்கிழமைகளில் ஈடுசெய்யுமாறும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019-ம் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் 12.4.2019 என தெரிவித்துகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், தொடக்கப்பள்ளிகளை (1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு) பொறுத்தவரையில் 13.4.2019-க்குள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு அடுத்த மாதம் 13-ந் தேதியுடன் நிறைவடைகிறது. #PublicExamination
    Next Story
    ×