search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
    X

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

    70 ஆண்டு கால கனவான அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். #Athikadavuavinashiproject #TNCM #Edapapdipalaniswami
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவை ரூ.66 கோடியில் மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

    இந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாஇன்று (வியாழக்கிழமை) திருப்பூர்- காங்கயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

    விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    எம்.பி.க்கள் சத்திய பாபா, மகேந்திரன், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜய குமார், கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்எம். ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இந்த விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் அவினாசி புறப்பட்டு சென்றார்.

    திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகும்.

    இது விவசாயிகளின் 70 ஆண்டு கால கனவு ஆகும். இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.1,532 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அவினாசி-கோவை பைபாஸ் சாலையில் எம்.நாதம்பாளையம் பிரிவு எதிரே அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பந்தலில் இன்று நடைபெற்றது.

    இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜய குமார், அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அத்திக்கடவு திட்ட போராட்ட கூட்டமைப்பினர் திருப்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாக விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

    விழா மேடை அருகே 108 பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். கூட்டமைப்பு சார்பாக முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



    அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு போராட்ட கூட்டமைப்பினர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கோவில் முன்பு 1008 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டு பின்னர் அவினாசி தாமரை குளத்தின் கரையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

    அவினாசி விழா முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஈரோடு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் திருப்பூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பூர் மற்றும் அவினாசி சுற்று வட்டார பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. #Athikadavuavinashiproject #TNCM #Edapapdipalaniswami
    Next Story
    ×