search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - பெண் படுகாயம்
    X

    புதுவை அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - பெண் படுகாயம்

    புதுவை அருகே இன்று காலை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அருகே ஏம்பலத்தை அடுத்த மணக்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது31). காங்கிரஸ் பிரமுகரான இவர் சமீபத்தில் நடந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    சபரிக்கு திருமணமாகி ஹேமாவதி என்ற மனைவியும் ஒரு மகளும் பிறந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளன. ஹேமாவதி கைக்குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சபரி தனது தாய் ராஜேஸ்வரி, தம்பி சுரேந்தர் மற்றும் மகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் சபரி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தூங்கிக்கொண்டு இருந்த ராஜேஸ்வரி மீது வெடிகுண்டு சிதறல்கள் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே ராஜேஸ்வரி மற்றும் சபரி அவரது தம்பி சுரேந்தர் வீட்டில் இருந்து வெளியே அலறியடித்து ஓடிவந்தனர். மேலும் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசியல் விரோதம் காரணமாக சபரி வீட்டில் வெடிகுண்டு வீசி இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×