search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி - சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி - சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    அருப்புக்கோட்டை காந்திநகரில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கும் பணிகளை சாத்தூர் ராமச் சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    அருப்புக்கோட்டை:

    மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்களும், தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக சென்னை செல்லும் பஸ்களும் அருப்புக்கோட்டை காந்திநகர் நிறுத்தத்தில் இருந்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.

    இந்தப்பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். என்ஜினீயர் சேர்மக்கனி, துணை என்ஜினீயர் காளஸ்வரி முன்னிலை வகித்தனர். சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பஸ்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் வராமல் நான்கு வழிச்சாலை வழியாகவே சென்று வந்த நிலையில் இங்குள்ள பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனை அறிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் பேசி மதுரையிலிருந்து வரும் பஸ்களும், தூத்துக்குடியிலிருந்து வரும் பஸ்களும் அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் தவிக்கும் அவல நிலை இருந்து வருகிறது.

    அதனை அறிந்து நகராட்சி அதிகாரிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டு நகராட்சிக்கு சொந்தமான காந்திநகர் அருகே நேரு நகரில் வாகனங்கள் வந்து நின்று செல்லும் வகையில் புதிய பஸ் நிறுத்தம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து பயணிகளின் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

    மேலும் திருப்புவனத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு வைகை தண்ணீர் வரும் குடிநீர் குழாய்கள் அனைத்தும் பழுதடைந்து விட்டது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 35 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ரூ.25 கோடியில் புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், ஓப்பந்தக்காரர் நந்தகுமார், நெசவாளர் அணி பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×