search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 6 வினா-விடையில் தவறு- நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்த முடிவு
    X

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 6 வினா-விடையில் தவறு- நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்த முடிவு

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 6 கேள்வி பதில் தவறாக உள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்ட 1200 காலி இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த 11-ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    இந்த தேர்வு 2 பிரிவாக நடந்தது. பொது அறிவுக்கு 100 கேள்வியும், மொழி பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் கேட்கப்பட்டன.

    இதற்கான விடை ‘ஆன்சர் கீ’ வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த தேர்வுக்கான 200 கேள்விக்கும் சரியான விடையை தேர்வாணையம் கடந்த 13-ந்தேதி வெளியிட்டிருந்தது. கேள்வி பதிலில் தவறு இருந்தால் ஆன்-லைனில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

    இதில் 6 கேள்வி பதில் தவறாக உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 2 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டுள்ளனர்.

    இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நடராஜன் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கடந்த 11-ந்தேதி நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கொடுக்கப்பட்டிருந்த கேள்வி-பதிலை சரிபார்த்த போது 6 கேள்வி-பதில் தவறாக உள்ளது. அதில் 153-வது கேள்வியில் நேபாள்-இந்தியா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எந்த இடத்தில் நடந்தது என்பதற்கு சரியான பதில் கொல்கத்தா என்று கொடுத்துள்ளனர். அது தவறு. உண்மையான பதில் காத்மாண்டு.

    அடுத்ததாக உணவு தானிய உற்பத்தியில் தஞ்சாவூர் தான் முதன்மை இடத்தில் உள்ளதாக கொடுத்துள்ளனர். அது தவறு. 2013-2014 ஆண்டு மாவட்ட கலெக்டரின் அதிகார பூர்வ இணையதளத்தில் விழுப்புரம் என்றும் இந்த மாவட்டத்தில்தான் 10 சதவீதம் உற்பத்தி அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    139-வது கேள்வியான புலித்தேவருக்கு உதவியது பிரெஞ்சுபடை. ஆனால் இவர்களின் விடையில் டச்சுப்படை உதவியதாக கூறி உள்ளனர். இது தவறு.

    11-வது கேள்வியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை எத்தனை நாட்கள் என்று கேட்டு 50, 100, 150 என கேட்டுள்ளனர். இதற்கு சரியான விடை 100 என டி.என்.பி.எஸ்.சி. கூறி உள்ளது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் 150 நாட்கள் என உயர்த்தி இருந்தனர்.

    எனவே 100 என்று எழுதி இருந்தாலும், 150 என்று எழுதி இருந்தாலும் சரி தான்.

    183-வது கேள்வியில் தேசிய விவசாய கொள்கையின் அடிப்படையில் எவ்வளவு வளர்ச்சியை எதிர்பார்த்தனர் என்பதற்கு 4 சதவீதம் என்பதில் கூறி உள்ளனர். ஆனால் 4 சதவீதத்துக்கும் மேல் வர வேண்டும் என்று எதிர்பார்த்தனர். எனவே 6 அல்லது 8 என்று எழுதினால் சரியான பதிலாகும்.

    மற்றொரு கேள்வியான ‘பிங் புல்வாம்’ என்ற ஒரு பூச்சியின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதில் எழுத்து தவறு உள்ளது.

    எனவே மேற்கண்ட 6 கேள்விக்கான பதிலை எழுதியவர்களுக்கு 9 மதிப்பெண் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக தேர்வாணைய அதிகாரி நந்தகுமார் கூறுகையில், குரூப்-2 தேர்வு வினா-விடை தவறு சம்பந்தமாக 2 ஆயிரம் பேர் முறையிட்டு உள்ளனர்.

    அவர்கள் சொன்ன பதில்களை நிபுணர் குழு வைத்து ஆய்வு செய்வோம். டி.என்.பி.எஸ்.சி.யின் கேள்வி பதில் தவறாக இருந்தால் அதை எழுதியவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்க ஆலோசிப்போம் என்றார். #tamilnews
    Next Story
    ×