search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்
    X

    குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 24ந்தேதி புதிய அறிவிப்பு - லதா ரஜினிகாந்த்

    தயா பவுண்டேஷன் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வருகிற 24-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று லதா ரஜினிகாந்த் கூறினார். #DhayaFoundation #LathaRajinikanth
    நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், ‘தயா’ பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கல்வியாளராகிய நீங்கள் ‘தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி, சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு தோன்றியது?

    பதில்:- நிறைய தர்மங்கள், சேவைகள் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய அப்பா, அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். சிறு வயதிலேயே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் ‘தயா பவுண்டேஷன்’ உருவாக காரணம்.

    இந்திய பண்பாட்டுடன் ஒட்டிய வாழ்க்கையில், சமூக சேவை என்பது ஒரு அங்கம். தற்போது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்று எங்களுடைய பள்ளி (தி ஆஷ்ரம் குருப் ஆப் இன்ஸ்டிட்டியூஷன்) குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கிறோம்.

    கேள்வி:- ‘தயா’ அமைப்பு மூலம் எத்தனை குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இத்தனை குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம் என்று நாங்கள் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. எல்லா ஊர்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் தயாவோடு தொடர்பு இருக்கிறது. பல குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்து எங்களுடன் இணைத்து மேடையில் ஏற்றியிருக்கிறோம். இப்படி 40 ஆண்டுகளாக பல தரப்பட்ட குழந்தைகளை நான் பார்த்து இருக்கிறேன். நான் பார்த்த குழந்தைகள், கல்யாணம் ஆன பிறகு கூட என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கி செல்கிறார்கள்.

    கேள்வி:- ‘தயா’ அமைப்பில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார்?

    பதில்:- எங்களுக்கு பக்கபலமாக ‘டாடா’ அறக்கட்டளை இருக்கிறது. பலவிதமான தேவைகள் மேலும் தேவைப்படுகிறது. தயா அமைப்பின் முயற்சிகள் என்பது, அனைவரும் ஒன்றாக சேரவேண்டும். இந்த ஒருங்கிணைப்பு இருந்தாலே நம்முடைய சமுதாயத்தை நாமே பாதுகாக்க முடியும்.

    இதற்காக எல்லா ஊர்களிலும் தயா அமைப்பின் மையங்களை உருவாக்க போகிறோம். தற்போது சென்னையை தவிர புனே, மும்பையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- நீங்கள் செய்யும் சேவைக்கு அரசு உதவி இருக்கிறதா?



    பதில்:- இதுவரைக்கும் சாருடைய (ரஜினிகாந்த்), என்னுடைய சொந்த முயற்சியில் நடந்தது தான் தயா அமைப்பின் பணிகள். தற்போது ஒரு லட்சம் பேருக்கு செய்வது, இன்னும் 10 லட்சம் பேருக்கு போய் சேர வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே இதற்கு பல பேருடைய துணை தேவைப்படுகிறது.

    ஏனென்றால் குழந்தைகளுக்கான தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. நாம் செய்கிற உதவிகள் பல பேருக்கு போய் சேர வேண்டும். எனவே யாரெல்லாம் தயா பவுண்டேஷனில் சேர விரும்புகிறார்களோ? மனதார நன்கொடை அளிக்க முன்வருகிறார்களோ? அவர்களுக்கு தயா அன்னதானம், தயா பூஜன், தயா கல்வி நிறுவனம் என்று தனித்தனி திட்டங்கள் இருக்கிறது.

    கேள்வி:- ‘தயா’ அமைப்பு சார்பில் 24-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சி எப்படி இருக்கும்?

    பதில்:- தற்போதைய சூழலில் குழந்தைகள் ஒரு எந்திர வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஐ-பாட், செல்போன்கள், டி.வி.க்கள் என்று வேறுமாதிரியான சூழலில் தான் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

    பழைய இந்தியா எப்படி இருந்தது? என்பது தெரியவில்லை. உலகம் புரிகிறது, அதில் இந்தியா குறைவான அளவே தெரிகிறது. எனவே இந்தியாவை பற்றி நன்றாக பிள்ளைகள் புரிந்துகொள்ளவேண்டும். நமது வழிமுறைகள், பாரம்பரியம், கலாசாரம், கலை போன்றவற்றை கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம்.

    முக்கியமாக ‘ஒன்றாக சேருதல்’ என்ற பழக்கம் வரவேண்டும். ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசும்போது தான் மனநிலை நன்றாக இருக்கும். தனியாக இருக்கும்போது தான் மனநிலையில் பிரச்சினை ஏற்படுகிறது. தனியாக ஒதுங்குதல், தனியாகவே இருத்தல், பேசாமல் இருத்தல், சிரிக்காமல் இருத்தல், ஆடாமல்-பாடாமல் இருத்தல் போன்றவை தான் மன அழுத்தம் வர காரணமாக அமைகிறது. அந்த மன அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற திருவிழாக்களை நாங்கள் நடத்துகிறோம்.

    திருவான்மியூர் கன்வென்ஷன் சென்டரில் சமீபத்தில் 3 நாட்கள் திருவிழா நடத்தினோம். அந்த விழாவில் எங்கள் நோக்கத்தை விதைத்துவிட்டோம். தற்போது 24-ந்தேதி அதே இடத்தில் மீண்டும் நடக்கும் புதிய திருவிழாவில் 1,500 குழந்தைகள் மேடையில் சிறந்த கலைஞர்களுடன் தங்கள் திறமையை வெளிக்கொணர உள்ளனர்.

    ‘எங்கள் உலகத்தின் முன்னோடிகளாக நாங்கள் உருவாகிறோம்’, என்று குழந்தைகள் தங்களுக்காக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். முதலில் குழந்தைகள் குழந்தைகளுக்காக உறுதிமொழி எடுக்கிறார்கள். பின்னர் பெரியவர்களும், குழந்தைகளும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்காக நாங்கள் என்று பெரியவர்கள் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

    எல்லா இடங்களிலும் குழந்தைகள் குறித்த முதன்மையான எண்ணம் உருவாக வேண்டும். அதுதான் முக்கியம். இந்த திருவிழாவில் குழந்தைகள் தான் சிறப்பு விருந்தினர்கள். இது ஒரு பொது காரியம். இதில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். மேலும் விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் இருந்து பிரபலங்கள் வருகிறார்கள்.

    மாலை 5 மணி முதல் 8 மணி வரை விழா நடைபெறுகிறது. தயா பவுண்டேஷன் உள்பட அரசு-தனியார் பள்ளி குழந்தைகள், சாலையோர குழந்தைகள் என எல்லா தரப்பிலான குழந்தைகளும் பங்கேற்க இருக்கிறார்கள். சிறு வயதிலேயே பிரபலங்களாக உயர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களது தனித்தன்மையை மேடையில் நாங்கள் எடுத்து கூற இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 10 குழந்தைகள் எங்கள் முக்கியமானவர்கள் பட்டியலில் (ஹால் ஆப் பேம்) இடம்பெறுவார்கள்.

    இசை, நாட்டியம் என திருவிழா நிறைந்திருக்கும். இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த திருவிழாவில் எதுவுமே போட்டியாக இருக்காது. குழந்தைகள் முழுக்க முழுக்க அனுபவித்து மகிழும் தளமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடக்கும்.

    கேள்வி:- சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு தயா அமைப்பு சார்பில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

    பதில்:- நீண்ட வருடங்களாக குழந்தைகளுக்கு என்று எந்த சிறந்த காரியங்களும் சமுதாயத்தில் நடைபெறவில்லை. பல தலைமுறைகளாக ஏதோ ஒரு விஷயத்தில் குழந்தைகள் தவித்துதான் வருகின்றனர். குப்பையில் கிடந்து உருண்டு தவழ்ந்தாலும், பங்களாவில் செழிப்பாக வளர்ந்தாலும் குழந்தையின் தேவை ஒன்று தான். பிறந்தது முதல் வளர்வது வரை அவர்களின் தேவை அன்பும், பாசமும், அரவணைப்பும் தான். அதோடு பாதுகாப்பும் மிக அவசியம்.

    அன்றைய சமுதாயத்தில் மக்கள் மிகவும் மனோபலம் கொண்டவர்களாக, உணர்வுரீதியாக உயர்ந்தவர்களாக இருந்தனர். பக்குவமான பெரியவர்களாக இருந்தனர். அந்த சூழ்நிலையில் எதையும் நமக்கு சொல்லித்தர தேவையில்லை. தானாகவே தெரிந்துகொண்டோம். இன்றைக்கு நாம் எதையும் சத்தம்போட்டு சொல்ல வேண்டியதிருக்கிறது. சமுதாயத்தில் பண்புகள், கலாசாரங்கள், ஒருங்கிணைந்து செயல்படுவது, ஒற்றுமை இதெல்லாமே குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் குழந்தைகள் வளருகிறார்கள். அப்படி வளரும்போது அவர்களது சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்களேன்...

    குழந்தைகள் உலகத்தில் வன்கொடுமை, சுரண்டல், தவறான பார்வை, கடத்தல் உள்பட பல பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. இதில் சிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை என்னாகும் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கான தீர்வுகள் என்னென்ன? என்பது 24-ந்தேதி திருவிழாவில் சொல்கிறோம். விழாவின் கடைசிபாகத்தில் அந்த முக்கிய தகவல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DhayaFoundation #LathaRajinikanth
    Next Story
    ×