search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே கஞ்சா விற்ற கடலூர் வாலிபர் கைது
    X

    பாகூர் அருகே கஞ்சா விற்ற கடலூர் வாலிபர் கைது

    பாகூர் அருகே கஞ்சா விற்ற கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    புதுவையில் நகர பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த கஞ்சா வியாபாரம் தற்போது கிராமப்புற பகுதிகளிலும் பரவி உள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் இந்த கஞ்சா விற்பனையை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் பாகூர் அருகே சோரியாங்குப்பம் நவாதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம்சிவகணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கஞ்சா வியாபாரியை கைது செய்ய பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் சாதாரண உடையில் நவாதோப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அதுபோல் நேற்று மாலை நவாதோப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஒரு வாலிபர் போலீஸ் கண்காணிப்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவரது சட்ட பையில் சோதனையிட்ட போது சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 420 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தார்.

    இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி என்ற லட்சுமணன் (வயது33) என்பதும் இவர் மீது புதுவை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை மற்றும் கடலூர்- சிதம்பரம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து சின்னத்தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×