search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியாத்தம் கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி படுகாயம்

    குடியாத்தத்தில் கல்குவாரி வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளிக்கு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் கல்லேரி பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில், பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். பாறைகளை பிளக்க டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி அடங்கிய வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைக்கிறார்கள்.

    வெடி சிதறும் பாறைகளை சிறு, சிறு கற்களாக உடைத்து ஜல்லி தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனர். இப்படி, அதே பகுதியை சேர்ந்த தசரதன் (வயது 27) என்கிற தொழிலாளி, கல் கம்பம் நடுவதற்காக பாறைகளை நீளமாக பிளக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    பெரிய பாறைகளாக இருந்தால், அவற்றில் சிறு சிறு துளையிட்டு கொஞ்சம் வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைத்துபிளந்துள்ளார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த தசரதன் தன் பக்கத்தில் வெடி மருந்துகளை வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் கூலித்தொழிலாளி தசரதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற தொழிலாளர்கள் சற்று தொலைவில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உயிருக்கு போராடிய தொழிலாளியை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தசரதனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×