search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான தொழிலாளியின் உடலை 5 கிலோ மீட்டர் சுமந்துசென்ற அவலம்
    X

    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான தொழிலாளியின் உடலை 5 கிலோ மீட்டர் சுமந்துசென்ற அவலம்

    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான ஜவ்வாதுமலை தொழிலாளியின் உடலை சாலை வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்துசென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. #RedSandersSmuggling
    போளூர்:

    ஆந்திராவில் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பல்லி வனப்பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போதைய துப்பாக்கிச்சூட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கானமலை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் பலியானார்.

    இந்த என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாகவும் காமராஜ் உடலை மறு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் இறந்தவரின் உறவினர்கள் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில முதன்மை செயலாளர் உட்பட 9 பேர் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், அதுவரை இறந்த காமராஜின் உடலை ஸ்ரீ காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி, காமராஜ் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் முன்னிலையில் இறந்த காமராஜின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.தொடர்ந்து வக்கீல் ரவி முன்னிலையில் ஸ்ரீகாளஹஸ்தி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன்பிரசாத், காமராஜின் உடலை அவருடைய மகன் ராமராஜனிடம் ஒப்படை த்தார்.

    காமராஜின் உடல் சொந்த ஊரான கானமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கானமலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்சில் சென்ற உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட முடியவில்லை. இதையடுத்து, கம்பில் துணியை கட்டி டோலி அமைத்து அதற்குள் உடலை வைத்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடு முரடான மலைப்பாதை வழியாக அவரது வீட்டுக்கு உறவினர்கள் சுமந்து சென்றனர்.

    பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. #RedSandersSmuggling
    Next Story
    ×