search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர்கள் செல்போன்களுக்கு அடிமையாகக் கூடாது - ஜகி வாசுதேவ்
    X

    இளைஞர்கள் செல்போன்களுக்கு அடிமையாகக் கூடாது - ஜகி வாசுதேவ்

    செல்போன் என்பது ஒரு சிறந்த நவீன கண்டுபிடிப்பு, அதை விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். அந்த இளைஞர்களிடம் சக்தி இருக்கிறது. அவர்களுக்கு தேவையான தெளிவும் உள்நிலையில் ஒரு சம நிலையையும் உருவாக்கி கொடுத்தால் அந்த சக்தியை ஒரு மகத்தான சக்தியாக மாற்ற முடியும்.

    அதன் அடிப்படையில் இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள் நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நாடு தழுவிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது.

    கேள்வி:- மொபைல் அடிமைத் தனத்தில் இருந்து இளைஞர்களை எப்படி மீட்பது?


    சத்குரு பதில்:- மொபைல் என்பது ஒரு சிறந்த நவீன கண்டுபிடிப்பு. அதை நல்ல முறையில் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, கட்டாயத்தின் அடிப்படையில் மொபைல் போனை பயன்படுத்துவதால் தான் அதற்கு அடிமையாகி உள்ளனர். நாம் விழிப்புணர்வுடன் அதை பயன்படுத்தினால் அந்த அடிமைத் தனத்தில் இருந்து விடுபடலாம்.

    கேள்வி:- இளைஞர்களின் தற்கொலையை தடுக்க உங்களுடைய ‘இளைஞரும் உண்மையும்’ என்ற பயணம் எப்படி உதவும்?

    பதில்:- இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது வருத்தம் அளிக்க கூடிய ஒன்று. குறிப்பாக, 15 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் நம்முடைய தற்போதைய கல்வி முறையில் உள்ள அழுத்தங்களால் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என சொல்லப்படுகிறது.

    எனவே, கல்விமுறையில் கொள்கை அளவில் தேவையான மாற்றங்கள் செய்வதற்கு மத்திய அரசுடன் பேசி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீதம் நேரம் மட்டுமே கல்வி கற்பதற்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை விளையாட்டு, இசை, பாரம்பரிய கலைகள் போன்றவற்றுக்காக ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக்க உள்ளோம்.

    கேள்வி:- நீங்கள் நடத்தும் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நகர்புறங்களில் தான் நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் எப்படி பயன்பெறுவார்கள்?

    பதில்:- கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்காக ஈஷா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள் அனைத்தும் தொலைதூர கிராமப் புறங்களில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 9,000 கிராமப்புற மாணவர்கள் நகர் புறங்களுக்கு இணையாக தரமான ஆங்கில வழி கல்வி கற்கின்றனர். மேலும், ஈஷா வித்யா பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு முழு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, தமிழகத்தில் 400 அரசு பள்ளிகளிலும், ஆந்திராவில் 4000 அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கேள்வி:- இந்தியாவில் நிறைய வேலையின்றி சிரமப்படுகின்றனர். போதிய வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

    பதில்- நம்முடைய இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு. இங்கு மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப போதிய தொழில் வளர்ச்சிகள் இன்னும் உருவாகவில்லை. அரசு வேலை என்பது வெகு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும். மேலும், இளைஞர்கள் படித்து பட்டம் வாங்கி விட்டு பிறரிடம் வேலை கேட்டு செல்வதை சற்று குறைக்க வேண்டும். அவர்களே நேரடியாக மக்களுக்கு பயன்படும் வகையில் தொழில் தொடங்க வேண்டும்.

    கேள்வி:- மத்திய அரசுக்கு நீங்கள் அளிக்கும் பரிந்துரையில் விவசாயத் துறைக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள்?


    பதில்:- தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடை சந்ததியினர் விவசாயம் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் நமது நாட்டின் உணவு பாதுகாப்பு என்பது பெரியளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே, புதிய கல்வி கொள்கை உருவாக்கும் போது அதில் விவசாய கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

    பெற்றோருடன் சேர்ந்து சிறு வயதில் இருந்தே வயலில் இறங்கி வேலை பார்த்தால் தான் விவசாயத்தை கற்றுக் கொள்ள முடியும். கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டும் விவசாயம் செய்துவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒருசம நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் “இளைஞரும் உண்மையும்” என்ற ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது.

    இதன் தொடக்கமாக இம்மாதம் (செப்டம்பர்) கோவை, சென்னை, பெங்களூரு, மைசூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங்க், வாராணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    ஐ.ஐ.எம். பெங்களூரு, ஐ.ஐ.டி மும்பை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம். அகமதாபாத் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நிகழ்ச்சி அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். இளைஞர்களும், மாணவர்களும் தாங்கள் விரும்பும் எந்த கேள்வியையும் சத்குருவிடம் கேட்க முடியும்.

    மேலும், இந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள், கேள்வி பதில்கள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தப்பட உள்ளது. #JaggiVasudev
    Next Story
    ×