search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே ரெயில் மீது கல்வீச்சு- பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் சிக்கினர்
    X

    நாகர்கோவில் அருகே ரெயில் மீது கல்வீச்சு- பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் சிக்கினர்

    மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலை கல்வீசி தாக்கிய பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் சிக்கினர்.
    நாகர்கோவில்:

    மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பார்வதிபுரம் ரெயில்வே பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளம் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் ரெயில் மீது கற்களை சரமாரியாக வீசி விட்டு தப்பியோடிவிட்டனர்.

    இதில் கல் தலையில் பட்டதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் சக பயணிகள் அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளித்தனர். அதற்குள் ரெயில் நாகர் கோவில் ரெயில்நிலையத்தை வந்தடைந்தது. நடந்த விவரங்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் தெரிவித்த அந்த பெண் அது பற்றி புகாரும் செய்தார்.

    இதை தொடர்ந்து நாகர் கோவில் ரெயில்வே பாது காப்புப்படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண் புகாரில் கூறிய இடத்திற்கும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் வருவதை கண்டதும் 3 பேர் அங்கிருந்து தப்பியோடினார்கள்.

    உடனே போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் ரெயில் மீது கல் வீசியவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் பிளஸ்-1 மாணவராவார். மற்ற 2 பேரும் சிறுவர்கள் ஆகும்.

    இதை தொடர்ந்து அந்த 3 பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். மாணவர் மற்றும் சிறுவர்களின் எதிர் காலம் கருதி அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர வில்லை. அதேசமயம் கல் வீச்சில் பெண் காயம் அடைந்தது பற்றி அவர்களிடம் எடுத்துக்கூறிய போலீசார் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு அவர்கள் 3 பேரையும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×